புதன், 30 ஏப்ரல், 2014

பதார்த்தகுண சிந்தாமணி - உணவின் ஒளிவிளக்கு

      மனிதன் ஆரம்ப காலத்தில் விலங்குகளை வேட்டையாடித் தன் பசியைப் போக்கிக் கொண்டான். பின்பு நெருப்பைக் கண்டறிந்த பின் உணவை எப்படியெல்லாம் பக்குவப்படுத்தி உண்பது என்ற கலையை அறிந்தான்.  எதை எப்படிப் பக்குவப்படுத்துவது, உண்பது என்பவைகளை அறிந்து கொண்டான். இயல்புக்கு மாறாக உண்பது உடலில் நோயை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்தான். உணவே மருந்தாகும் முறையை அவன் அறிந்துகொள்ளப் பல ஆயிரம் ஆண்டுகள் ஆயிருக்கக் கூடும். ஆம். ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கு முன் பல படிப்பினைகள் நிகழ்ந்திருக்கக் கூடும்.
      பசித்துப் புசி, அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு, நொறுங்கத் தின்றால் நூறு வயது போன்ற பழமொழிகள் உணவு மற்றும் உணவை உண்பதன் கட்டுப் பாட்டை நமக்கு உணர்த்துகின்றன. மாறிவரும் சமூகத்தில் உணவுமுறை மிக மோசமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் துரித உணவகங்கள், பொறித்த பண்டங்கள்.... முன்பெல்லாம் மாலை நேரம் ஆகிவிட்டால் எங்கோ சில இடங்களில் தள்ளு வண்டிகளில் வடை சுடுவர். பிட்டு, அப்பம் முதலான உணவு வகைகள் அதில் இடம் பெறும். இவ்வளவு ஏன் நம் சிலப்பதிகாரத்தின் கடலாடு காதையில் கடலோரத்தில் பலவகை உணவுப் பொருட்கள் விற்கும் அங்காடிகள் இருந்ததைப் பற்றிப் படிக்கும் போது எனக்கு மெரினா கடற்கரை, மதுரைத்  தெப்பக்குளத்தைச் சுற்றியும் அமைந்துள்ள சிறு சிறு அங்காடிகள் நினைவிலாடுகின்றன. 

     ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் மாலைப் பொழுதுகளில்-தள்ளு வண்டிகளில் பானி பூரி, சில்லி சிக்கன் என்பன வந்துவிட்டன. அதிலும் கோழி இறைச்சியை செந்நிற மிளகாய்ப் பொடியில் வண்ணமூட்டித் தோரணமாகத் தொங்கவிட்டுள்ள காட்சியும், எண்ணெயில் அதைப் பொறித்து எடுக்கும் நெடியும்....அப்பப்பா அனைவரும் இவற்றை உணர்வர். இவற்றை உண்பதால் உடலில் நோய் ஒட்டிக்கொள்ளும்(கொல்லும்) என்பதைத் தெரிந்தே உண்கின்றனர்.  கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு?
 நாம் உண்ணும் உணவு ஒவ்வொன்றும் மருந்து என்பதை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.  “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு” எனும் திருக்குறட்கருத்து நம் உடலுக்கு மருந்து என்ற ஒன்று தேவை இல்லை என்பதைக் கூறுகிறது. எனவே உண்ணும் உணவையும் உணவு முறையையும் சீர்ப்படுத்திக் கொண்டால் நலமுடன் வாழலாம்.

     நான் சமச்சீர்க் கல்வியில் ஆறாம் வகுப்புப் பாடநூல் குழுவில் இருந்த போது பதார்த்தகுண சிந்தாமணி எனும் நூலைக் கண்டுகொள்ள நேர்ந்தது.  அந்த நூல் அரிய நூலாக இருந்தது. கன்னிமரா நூலகத்தில் இருந்து பழமையே உருவான நிலையில் அந்த நூலை நான் கண்டேன்.  அந்த நூலை புத்தகக் கண்காட்சி ஒன்றில் மறுபதிப்பாக வந்தமையைப் பார்த்த போது உடனே வாங்கிக் கொண்டேன். அதை வாசித்த அனுபவத்தை இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறேன்.
    பெயர் அறியப்படாத சித்தர் ஒருவரால் எழுதப்பட்ட நூல் பதார்த்தகுண சிந்தாமணி. கடவுள் வாழ்த்துடன் தொடங்கும் இந்த நூல் பதார்த்த வகை, வைத்தியாங்கம், தினக்கிரமாலங்காரம் என்ற பகுப்புகளை உடையது. வெண்பா மற்றும் விருத்தப் பாக்களால் இயற்றப் பட்டது.ஆயிரத்து ஐந்நூற்றுப் பதினொரு பாடல்கள் உள்ளன.

 பதார்த்த வகை: 

     பதார்த்தம் என்பது உணவு. இந்த உணவை உண்டாக்குகின்ற பஞ்ச பூதங்கள், நிலங்கள் அவற்றின் தன்மை முதலில் விளக்கப் படுகின்றது. ஓரறிவு முதல் ஐந்தறிவு ஈறாக உள்ள உயிர்களையும் அவற்றை உண்பதால் உடலில் உண்டாகும் நோய்கள், விலகுகின்ற நோய்கள் முதலியன நன்கு கூறப் படுகின்றன.
நீர் வகை என்று எடுத்துக் கொண்டால் மழை, ஆலங்கட்டி, பனி, ஆற்று நீர், பல்வகை நதிகள், குளம், ஊற்று, கிணறு, ஓடை, பல்வகை அருவிகள், வெந்நீர், பலவகைப் பாத்திரங்களில் சூடேற்றப்பட்ட நீர் அவற்றின் குணம், அவற்றால் ஏற்படுகின்ற விளைவுகள் அருமையாகக் கூறப்பட்டுள்ளன.
பல வகை விலங்குகளின் பால், மரங்கள் செடிகளில் இருந்து எடுக்கப்படும் பால், தயிர், மோர், வெண்ணெய், சிறுநீர், பல்வகைப் பழங்கள், பாகு, சர்க்கரை, கற்கண்டு, தேன், மது, மரங்கள் அவற்றின் குணம், செடிகொடிகள், கிழங்குகள், வேர்கள், புல், மரப்பட்டை, கீரை, இலை, மரப்பிசின்,பூக்கள், பிஞ்சுகள், வித்துகள், அரிசி தினை வகை எனப் பட்டியல் நீள்கிறது.
இறைச்சி வகை என்பதைச் சொல்லும் போது, ஆடு, குறும்பாடு, பன்றி, உடும்பு, புலி, கரடி, முதலை, பூனை, கீரி, நாய், எலி, மாடு முதலானவை இடம்பெறுகின்றன.  பலவகையான மீன்களும் அவற்றின் இறைச்சி மருந்தாகும் தன்மை நன்கு விளக்கப் பட்டுள்ளன.  
வைத்தியாங்கம் பகுதி:
     இந்தப் பகுதியில் நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப மருந்து உட்கொள்ளும் முறை கூறப்பட்டுள்ளன. மருந்துகளைத் தயாரிக்கும் முறை நன்கு விளக்கப் படுகின்றது.
தினக்கிரமாலங்காரம்:
   இந்தப் பகுப்பில் வீடுகளின் வகை, ஒவ்வொரு வகை வீட்டின் குணம், எப்படித் தூங்குவது, எழுவது, பல் துலக்குவது, கழிவகற்றுவது, உடற்பயிற்சி, புணரும் இயல்பு முதலிய செய்திகள் உள்ளன. விசிறிகளின் வகைகளும் ஒவ்வொரு வகை விசிறியால் ஏற்படுகின்ற விளைவுகளைக் கூறி இருக்கும் நிலையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
      விரைவாக முன்னேறிவரும் உலகில் பல துறைகள் உருவாகிக் கொண்டே செல்கின்றன.  மனையியல் கல்வி எனும் துறை நம் நாட்டிற்குப் புதிதன்று என்பதை இந்த நூல் படித்ததன் பின் உணர்கிறேன். ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இந்த நூல் இருக்க வேண்டும்.  வாழும் முறையைக் கற்றுக் கொடுத்தவை  குருகுலங்கள்.  ஆறுமுக நாவலரின் பால பாடம் எனும் நூலிலும் குருகுலக் கல்வி முறை எப்படி இருந்தது என்பதை அறியலாம். ஆனால் இன்று தகவல்களைத் திணிக்கும் முறையாக கல்வி உருவெடுத்துள்ளது என்பதையும் இந்த நூல் வாசிப்பின் பின்பு உணர்கின்றேன்.
    எவற்றை உண்டு, எப்படி வாழ வேண்டும் எனும் கலையை விளக்கும் பதார்த்தகுண சிந்தாமணி வீட்டின் ஒளி விளக்கு. 

இந்த நூலில் உள்ள சில பாடல்கள் கீழே....
வெந்நீரின் குணம்
     நெஞ்செரிப்பு நெற்றிவலி நீங்காப் புளிஏப்பம்
     வஞ்சமுற வந்த வயிற்றின்நோய்   -  விஞ்சியே
     வீழாமக் கட்டோடு  வெப்புஇருமல்  சுட்டநீர்
     ஆழாக்குட்  கொள்ள  அறும்.
வெள்ளாட்டு இறைச்சியின் குணம்
     உள்ளாறும் நோயெல்லாம்  ஓடும் உடல்பறக்கும்
     தள்ளாடு வாதபித்தம் சாந்தமாம்  -  வெள்ளாட்டின்
     நற்கறியை உன்பார்க்கு நாடுகய  ரோகமும்போம்
     மற்குரிய  வன்பலனாம் வாழ்த்து.
கோழிக்கறியின் குணம்
     கோழி கறிநெருப்பாம்  கொள்ளில்  மருந்துரம்வங்
     கூழைக்  கருப்புமந்தம் கூறரகம்  -  மாழ்கிப்போம்
      நீளுற்ற  போகம்  நிணக்கிரந்தி  பித்தமுண்டாம்
      தூளித்த  மெய்இளைக்கும்  சொல்
காடைக் கறியின் குணம்
     கட்டில் கிடப்பார்க்குக் காட்டில்  படும் காடை
     மட்டவிழும்   கோதாய் மருந்தன்றோ  -  இஷ்டம்உற
     சோறு புகும்  சோபைஅறும்  துன்நோய் எல்லாம் ஏகும்
     வேறுமருந்து  ஏற்றுவதேன்  விள்

அயிரை மீனின் குணம்
     உயிரை வளர்க்கும்  உடற்பிணியை  நீக்கும்
     மயிரை  வளர்க்கும்  அருசி மாற்றும் – வயிரச்
     செயிரையுறாச்  சற்குணநல்  தெள்ளமிர்தே  நாளும்
     அயிரை எனும் மீன் அது.
நோய் அணுகா விதி
     திண்ணம் இரண்டுள்ளே சிக்க அடக்காமல்
     பெண்ணின்பால் ஒன்றைப் பெருக்காமல் – உண்ணுங்கால்
     நீர் கருக்கி மோர் பெருக்கி நெய்யுருக்கி  உண்பவர்தம்
     பேருரைக்கிற்  போமே பிணி. 
     

திங்கள், 14 ஏப்ரல், 2014

ஏழு - ஏழ்


              தமிழ் மொழியில் உள்ள எண்ணுப் பெயர்கள் குற்றியலுகரச் சொற்களாகவே உள்ளன. ஆனால் எண் ஏழு என்பது மட்டும் அதில் விலகி உள்ளதைத் தொல்காப்பியத்தின் மூலம் நாம் உணரலாம். ஆம் நண்பர்களே!  எண் ஏழு குற்றியலுகரச் சொல்லா என்பதில் சற்று ஐயம்.  ஏழ் என்பதே சரியான வடிவம்.  தொல்காப்பியத்தில் எண்ணுப் பெயர்ப் புணர்ச்சிகள் யாவும் குற்றியலுகரப் புணரியலில் கூறப் பட, ஏழு என்பதற்குரிய புணர்ச்சி மட்டும் மெய்யீற்றுப் புணரியலில் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். ஆகவே, ஏழு என்பது ஏழ் என்று வழங்கியதை நாம் உணர்வோமாக.

            ஏழு எனும் சொல்லில் தான் எவ்வளவு செய்திகள்... சமீபத்தில் தொகை அகராதி எனும் நூலை வாசித்தேன். அதில் எண் ஏழு பற்றி நிறைய தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. அவற்றை நம் வலைப்பூவில் பகிர்ந்து கொள்கிறேன்.
 எழுகடல் :  உப்புக் கடல், தேன் கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், தயிர்க் கடல், நெய்க் கடல், பாற்கடல், சுத்தநீர்க் கடல்
ஏழு பருவ மகளிர்: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
எழுபிறப்பு: தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்
எழுவகைத் தாது: தோல், இரத்தம், இறைச்சி, மேதை, எலும்பு, மச்சி, சுவேத நீர்
எழுவகை மாதர்: அபிராமி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேஸ்வரி, மாகாளி
எழுவகை மேகங்கள்: சம்வர்த்தம், ஆவர்த்தம், புத்களா வர்த்தம், சந்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம்
எழுவகைக் கீழ்  உலகங்கள்: அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதலம்
எழுவகை மேல் உலகங்கள்: பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகாலோகம், ஜனலோகம், தவலோகம், சத்தியலோகம்
அகத்திணைகள்:  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
புறத்திணைகள்: வெட்சி, வஞ்சி, காஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண்
இசை:  குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
உலோகங்கள்: செம்பொன், வெண்பொன், இரும்பு, ஈயம், வெண்கலம்,செம்பு, தரா
அளவைகள்: நிறுத்தல், பெய்தல், சார்த்தல், நீட்டல், முகத்தல், தெறித்தல், எண்ணுதல்
நதிகள்: கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, காவிரி, குமரி, கோதாவரி
சுரங்கள்: ச, ரி, க, ம, ப, த, நி
தாளங்கள்: துருவம், மத்தியம், ரூபகம், சம்பை, திரிபுடை, அடதாளம், ஏக தாளம்
சப்தபுரிகள்: அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை
முதல் ஏழு வள்ளல்கள்: குமணன், சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி
இடை ஏழு வள்ளல்கள்: அக்குரன், சந்திமான், சிசுபாலன், தந்த வக்கிரன், கன்னன், சந்தன்
கடை ஏழு வள்ளல்கள்: எழினி, ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், மலையன்  
நிறங்கள்:  ஊதா, நீலம், கருநீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு 
இன்னும் இன்னும் எவ்வளவோ!!! 

வியாழன், 10 ஏப்ரல், 2014

விருந்தோ... அமரர் மருந்தோ...

         விருந்தோ... அமரர் மருந்தோ...

ஆன்றோர் உண்ணும் அமுதம் தானோ!
என்னவள் இல்லம் இமயம் தானோ!
அத்தையும் மாமனும் அருகில் தோன்றி
மெத்த அருளும் இறைவரும் தாமோ!

மூன்று ஆண்டாய்  முடித்த காதலைத்
தோன்றச் செய்து துணிந்த மனத்துடன்
ஈன்ற மகளை எனக்கென அருளிய
நான்காண் தெய்வம் நான்புகழ் தெய்வம்!

விருந்தென என்னை வீட்டிற்கு அழைத்து
அரும்பிய புன்னகை அள்ளித் தெளித்து
அருந்தமிழ் போலே ஆன்ற உணவை
விருந்தெனப் படைத்தனர் வியக்குது நெஞ்சம்!

காலை நேரம் காரட் அல்வா
பாலை அடக்கிய பாலின் அல்வா
மண்மணம் வீசும் மல்லிச் சட்டினி
தென்னங் காயின் தீஞ்சுவைச் சட்டினி


நாசி துளைக்கும் நறுமணச் சுவையுடன்
பாசிப் பருப்பில் பதார்த்த சாம்பார்
பூரி கொண்டு புசிக்கும் போது
பாரி கூடப் பசித்துப் போவான்!

சுக்கு போட்டுச் சுட்ட பாலின்
பக்குவம் தன்னைப் பகரும் போது
கரத்த தொண்டை கனிவாய்த் தோன்றி
உரத்த குரலில் ஊர்க்கே சொல்லும்!

ஆவின் தயிரில் உள்ளிப் பச்சடி
நாவின் அடியில் எச்சிலை எழுப்பும்
முந்திரி போட்டு முடித்த சாதம்
இந்திர லோகம் எங்கும் வீசும்!


அத்தை செய்த அமுதுக்கு நிகரா
சொத்தை ஆன மாலை உணவு!
என்னவள் அருகில் இனிதாய் இருக்க
இன்சுவை தானே இந்த உணவும்!


புளியின் சாதம் புன்னகை தோற்றும்
களிக்கச் செய்து கனிவுறும் மனத்தை
மல்லிகைப் பூப்போல் இட்டலி கூட
மெல்ல இறங்கும் தக்காளி குழம்பால்!

என்ன சொல்லி என்ன மிஞ்சும்
என்னவள் வீட்டில் அன்பா பஞ்சம்!
என்னவள் வீட்டைப் பிரியும் போது
என்றன் கண்ணில் கண்ணீர் மிஞ்சும்!





செவ்வாய், 8 ஏப்ரல், 2014

இலக்கணமும் பண்பாடும்

                                                                                                                                                        


         உலகத்தில் உள்ள பல மொழிகளின் இலக்கணத் தன்மையில் இருந்து கொஞ்சம் வேறுபட்டது நம் தமிழ் மொழி.  தமிழர் வாழ்வியலை அகம், புறம் எனப் பிரித்துப் பொருள் இலக்கணம் வகுத்துக் கொடுத்தது தமிழ் மொழி ஒன்றே.  பொருள் இலக்கணத்தில் மட்டுமின்றிச் சொல் இலக்கணம் சொல்லும் போதும் பண்பாட்டைப் புலப்படுத்தியுள்ளார் தொல்காப்பியர்.

வணிக வழக்கும் நேர்மறை சிந்தனையும்:

    வணிகர்கள் தம்மிடம் பொருள் வாங்க வருபவர் பொருள் ஒன்றைக் கேட்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பொருள் இருப்பில் இல்லாத நிலையில் உடனே வணிகர் ‘இல்லை’ என்று கூறக் கூடாது. இருக்கின்ற பொருளைக் குறிப்பிட்டுக் கூற வேண்டும்.
         “ எப்பொருள் ஆயினும் அல்லது இல்லெனின்
          அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல் “ (தொல்.சொல். 35 )
      அப்படியே இல்லை என்று சொல்லும் நிலை வந்தாலும் பொருளைக் குறிப்பிட்டு ‘இதுவல்லது இல்லை’ என்றே கூற வேண்டும்.
                        “அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல்”  (தொல்.சொல்.36  )
அதாவது ஒருவர் கடைக்குச் சென்று துவரம் பருப்பு கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.  கடையில் அப்பருப்பு இருப்பு இல்லாத நிலையில் கடைக்காரர் “கடலைப் பருப்பு உள்ளது” என்று கூறலாம். அல்லது “கடலைப் பருப்பு அல்லது இல்லை “ என்றும் கூறலாம்.  இப்படி நேர்மறையாகப் பதில் கூறும் நுட்பத்தைத் தொல்காப்பியச் சொல்லதிகாரக் கிளவியாக்கத்தில் நாம் உணரலாம்.

அறிவுரையும் தகுதியும்:

    “ ஊருக்கு உபதேசம் தனக்கு இல்லை “ என்ற பழமொழி உண்டு. காரணம் பலர் இப்படித் தனக்கு ஒரு நீதி பிறருக்கு ஒரு நீதி என்று வாழ்கின்றனர்.  ஆனால் அறிவுரை கூறுபவர் முதலில் அதனைப் பின்பற்றி ஒழுகுபவராக இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் தொல்காப்பியச் சொல்லதிகார வினையியல் நூற்பா ஒன்றின் மூலம் அறியலாம்.
     “இதுசெயல் வேண்டும் என்னும் கிளவி
     இருவயின் நிலையும் பொருட்டா கும்மே
     தன்பா லானும் பிறன்பா லானும்”  ( தொல்.சொல்.243  )
      ஒருவரிடம் ‘இதனைச் செய் இப்படிச் செய்’ என்று  கூறுகின்றோம் என்றால் அதைச் செய்யும் ஆற்றலும்  பின்பற்றும் தன்மையும் நம்மிடம் வேண்டும்.  உளப்பாட்டுத் தன்மை வினை முன்னிலையையும் உணர்த்தும் என்பதை உணர்த்த வந்து தொல்காப்பியர் அறிவுரை கூறுவதற்கும் ஒரு தகுதி உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். 
     எவற்றையும் நாம் இயல்பாகக் கூறிவிடுவோம். ஆனால் செயல் வடிவம் தருவதே பிரதானமானது.
            “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
            சொல்லிய வண்ணம் செயல்”
 என்றார் வள்ளுவரும்.        

  இவ்வாறு  இலக்கண விதிகளின்படி வாழ்வியலையும் அமைத்துக் கொள்வோம்.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

குற்றியலுகரம் புள்ளி பெறுமா?

                           குற்றியலுகரம் புள்ளி பெறுமா?
       நம் தமிழ் மொழியில் மெய்யெழுத்துகள் புள்ளி பெறுகின்றன. உயிர் எழுத்துகளில் எகரம் ஒகரம் ஆகிய இரண்டும் புள்ளி பெற்று வழங்கின.
              “மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்”
              “எகர ஒகரத்து இயற்கையும் அற்றே”
என இவற்றைத் தெளிவு செய்கின்றது தொல்காப்பியம். இப்போது ஒரு ஐயம் எழுகின்றது. என்னவென்றால் 
               “குற்றியலுகரமும் அற்றென மொழிப” 
எனும் நூற்பாவை உணரும் போது குற்றியலுகரமும் முன்பு புள்ளி பெற்றதா? என்பது.
     பொதுவாகத் தமிழில் ஓர் எழுத்து தன் மாத்திரையிலிருந்து பாதி அளவில் குறைந்து ஒலிக்கும் போது புள்ளி பெறுகின்றது.  க – ஒரு மாத்திரை க் – அரை மாத்திரை.  இந்தக் கோட்பாட்டை நாம் தொல்காப்பியத்தின் மூலமாகவே பெறுகின்றோம்.  தொல்காப்பிய நூன்மரபில்                                                                                                         "உட்பெறு புள்ளி உருவா கும்மே”
எனும் நூற்பா மகரக் குறுக்கத்தின் வரிவடிவத்தை உணர்த்துகின்றது.   மகர மெய் புள்ளி பெற்றே இருக்கும். இது தனது அரை மாத்திரையில் இருந்து குறுகிக் கால் மாத்திரையாக ஒலிக்கின்ற போது புள்ளி இட்டு எழுதுக என்பதே இந்த நூற்பாவின் பொருள். இந்த நூற்பா மாட்டேறு நூற்பா.
  “ அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே
       இசை இடன் அருகும் தெரியும் காலை”
என்பதே இதற்கு முந்தைய நூற்பா. எனவே, மகரக் குறுக்கம் மேலும் ஒரு புள்ளி பெற்று எழுத வேண்டும் என்ற கருத்தைப் பெறுகின்றோம். 
அதே போல
               “ குற்றியலுகரமும் அற்றென  மொழிப”
எனும் நூற்பாவும் மாட்டேறு நூற்பா. இதற்கு முந்தைய நூற்பாக்கள்                    “மெய்யின் இயற்கை புள்ளியயொடு நிலையல்”
          “எகர ஒகரத்து இயற்கையும் அற்றே”
என்பன. எனவே, குற்றியலுகரமும் புள்ளி பெறுமா எனும் கருத்து தோன்றுகிறது. காரணம் உகரம் தன் மாத்திரையில் இருந்து குறுகி ஒலிக்கிறது. ஆகையால் மகரக் குறுக்கம் போலக் குற்றியலுகரமும் முற்காலத்தில் புள்ளி பெற்றதா எனும் கருத்து உதயமாகிறது. 

     இங்கு இன்னொரு கருத்தும் நோக்கத்தக்கது. மெய் எழுத்து உயிர் எழுத்து ஏற இடம் தருவதைப் போலக் குற்றியலுகரமும் தான் ஊர்ந்து வந்த மெய்யை விட்டு உயிர் ஏற இடம் தருகின்றது. 
கொக்கு +  அழகு = கொக் + அழகு = கொக்கழகு. 

     இப்படி எழுத்தின் தன்மை அடிப்படையில் பார்த்தால் குற்றியலுகரம் புள்ளி பெறும் என்பதையும், புணரியல் அடிப்படையில் பார்த்தால் குற்றியலுகரம் மெய் போல உயிர் ஏற இடம் தரும் என்ற கருத்தையும் பெறுகின்றோம்.  ஆனால், குற்றியலுகரம் புள்ளி இட்டு எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. இருப்பினும் தமிழ் மொழியின் வரி வடிவ ஆய்விற்கு இந்த நூற்பாக்கள் இன்றியமையாது விளங்குகின்றன.
>